ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க அரசாங்கம் உறுதி: துணைப் பிரதமர்
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாய்க் கூறியுள்ளார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்க அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளதாய்க் கூறியுள்ளார்.
வேலை ஆதரவு போன்ற திட்டங்கள் கூடிய விரைவில் முடிவுக்கு வந்தாலும், அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனத் தமது Facebook பதிவில் அவர் குறிப்பிட்டார்.
COVID-19 சூழலுக்கேற்ப, தற்போதுள்ள ஆதரவுத் திட்டங்களை மாற்றியமைக்க அரசாங்க அமைப்புகளுடன் தீவிர கலந்துரையாடல்கள் நடைபெறுவதாய் திரு. ஹெங் கூறினார்.
கடந்த சில மாதங்களாய் நடப்பிலுள்ள ஆதரவுத் திட்டங்கள் எவ்வளவு பயனளித்துள்ளன என்பதைப் பற்றியும் வர்த்தக, தொழிற்சங்கத் தலைவர்களுடன் தாம் கேட்டறிந்ததாய் அவர் சொன்னார்.
பொருளியல் மீட்சியடைய இன்னும் சிறிது காலம் பிடிக்கும் என்பதை சுட்டிய திரு. ஹெங், நோய்ப்பரவலின் பாதிப்பு ஊழியர் அணியில் மேலும் பல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.
இணைய வர்த்தகம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த வழிகளைப் பல தொழில்கள் பயன்படுத்தத் தொடங்கியதை அவர் மெச்சினார்.