சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 4 ஓட்டுநர்களுக்கு அபராதம்
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாருவிற்குச் சட்டவிரோத வாகனச் சேவைகளை வழங்கிய 4 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாருவிற்குச் சட்டவிரோத வாகனச் சேவைகளை வழங்கிய 4 ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Public Service Vehicle Licence எனப்படும் பொதுச் சேவை வாகன உரிமத்தைப் பெறாமல், ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டணத்திற்கு வாகனச் சேவையை அவர்கள் வழங்கியதாக நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (பிப்ரவரி 13) தெரிவித்தது.
அந்த 4 ஓட்டுநர்களும் வெவ்வேறு சம்பவங்களில் விசாரிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஆளுக்கு மொத்தம் 1,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதோடு அனைத்து ரக வாகனங்களையும் ஓட்டுவதற்கு 12 மாதத் தடையும் விதிக்கப்பட்டது.
மேலும், மூவரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், உரிமமில்லாமல் டாக்சி அல்லது ஓட்டுநருடன் கூடிய சேவைகளை வழங்கக்கூடாது என நிலப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.
அம்மாதிரியான குற்றம் புரிபவர்களுக்கு 3,000 வெள்ளி வரை அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.