சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பங்களாதேஷ் ஆடவர், மலேசியப் படகோட்டி கைது
படகு வழியாகக் கள்ளத்தனமாய் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 20 வயது பங்களாதேஷ் ஆடவரும் 46 வயது மலேசியப் படகோட்டியும் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர்.
சிங்கப்பூர்: படகு வழியாகக் கள்ளத்தனமாய் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 20 வயது பங்களாதேஷ் ஆடவரும் 46 வயது மலேசியப் படகோட்டியும் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர்.
நேற்று (மார்ச் 26) இரவு 8 மணி அளவில் பொங்கோல் பாராட் பகுதியில் படகு கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூர்க் கடற்பகுதியில் நுழையும் போது படகிலிருந்து ஆடவர் ஒருவர் குதித்து நீந்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் படகு அவ்விடத்தை விட்டுச் சென்றது.
படகை நிறுத்துமாறு கடலோரக் காவல்படை எச்சரித்தும் படகோட்டி அவ்வாறு செய்யாததால் படகை இடைமறித்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
பங்களாதேஷ் ஆடவர் பொங்கோல் பாராட் கரையோரம் கைது செய்யப்பட்டார்.
ஜொகூர் கரையோரமாக ஆடவரைப் படகில் ஏற்றியதாகப் படகோட்டி கூறினார். இருவர் பயணம் செய்த படகும் சுமார் 1,300 வெள்ளி பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோதமாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றதாக இருவரின் மீதும் குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் அதிகபட்சமாக 6 மாதச் சிறைத்தண்டனையுடன் குறைந்தது 3 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.