"சிங்கப்பூர் பொருளியல் மறுசீரமைப்பு முயற்சிகளை வலுப்படுத்தவேண்டும்": நிதியமைச்சர் ஹெங்
சிங்கப்பூர் அதன் பொருளியல் மறுசீரமைப்பு முயற்சிகளை வலுப்படுத்தவேண்டும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் வலியுறுத்தியிருக்கிறார்.
சிங்கப்பூர் அதன் பொருளியல் மறுசீரமைப்பு முயற்சிகளை வலுப்படுத்தவேண்டும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியெட் வலியுறுத்தியிருக்கிறார்.
சிங்கப்பூர்ப் பொருளியல் வளர்ச்சியும், உலகப் பொருளியல் வளர்ச்சியும் மெதுவடைந்து வரும் வேளையில் அது அவசியம் என்றார் திரு. ஹெங்.
வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கி, அனைத்துலகப் பண நிதியம் ஆகியவற்றின் வருடாந்தரக் கூட்டங்களின் நிறைவில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் நிலவும் சூழலில் அந்தக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
உலக வர்த்தகம், பொருளியல் வளர்ச்சி இரண்டிலும் அந்த வர்த்தகப் பதற்றம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்துலகப் பண நிதியம் இந்த ஆண்டுக்கான உலகப் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை மூன்றரை விழுக்காட்டிலிருந்து 3.3 விழுக்காடாகக் குறைத்துக்கொண்டது.
சிங்கப்பூரில் பொருளியல் மந்தம் பற்றிய கவலைகள் எழுந்துள்ளது குறித்தும் அமைச்சர் ஹெங் பேசினார்.
சென்ற வாரம் சிங்கப்பூர் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான முன்னோடி மதிப்பீடுகளை வெளியிட்டிருந்தது. பொருளியல் வளர்ச்சி 1.3 விழுக்காடு குறைந்திருப்பதை அது காட்டியது.
உலகப் பொருளியல் சூழலினால் ஏற்பட்ட பாதிப்பு, வளர்ச்சிப் பாதையில் சிங்கப்பூரின் தற்போதைய இடம் ஆகியவற்றால் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் என்பதை மறுப்பதற்கில்லை என்று அமைச்சர் விளக்கினார்.
அதனால் சிங்கப்பூரின் பொருளியல் மறுசீரமைப்பு முயற்சிகளை மேலும் வலுவாக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
நாளை அவர் சான் பிரான்ஸிஸ்கோவில் வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார். மின்னிலக்கப் பொருளியலில் வர்த்தகங்களை அவர்கள் எவ்வாறு மாற்றியமைத்துள்ளானர் என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சந்திப்பு உதவும் என்று நம்பப்படுகிறது.