தேக்கா நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள படங்கள்... அதன் பின் உள்ள மர்மம் என்ன?
தேக்கா நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள படங்கள்... அதன் பின் உள்ள மர்மம் என்ன?
தேக்கா நிலையம் அமைந்துள்ள கட்டடத்தின் வெளிப்புறத்தில் சிலரின் படங்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளதை நம்மில் பலர் கண்டிருக்கலாம்.
அவை ஏன் அங்கு இருக்கின்றன? அவற்றின் பின்னணி என்ன? என்று 'செய்தி' நேயர்கள் பலரும் கேட்டனர்.
அறிந்து வந்தது 'செய்தி'...
Inside Out சிங்கப்பூர் என்ற திட்டத்தின் கீழ் அந்தப் படங்களைச் சிங்கப்பூர் அனைத்துலக நிழற்பட விழா (Singapore International Photography Festival) 2020 அங்கு ஒட்டியது.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைக் கொண்டாட, சமுதாயத்தில் ஒற்றுமையையும் நம்பிக்கையையும் ஊக்குவிப்பதற்காக அந்தப் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தேக்கா நிலையம் உட்பட 5 இடங்களில் அந்தப் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதன் தனித்தன்மை?
மக்களுக்காக மக்களே செய்த ஒரு பொதுக் கலைப்படைப்பு.
படங்களில் இருக்கும் அனைவரும் சாதாரண மக்கள்.
தேக்கா அருகே உள்ள குடியிருப்பாளர்கள், அங்குள்ள உணவங்காடியில் கடை வைத்திருப்போர், அங்கு அடிக்கடி செல்வோர் எனத் திட்டத்தில் பங்கெடுக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
சென்ற நவம்பர் மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி தேக்கா நிலையத்திலேயே படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அவ்வாறு மொத்தம் 300 படங்கள் அச்சிடப்பட்டு, அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
அவற்றை இம்மாதம் 17ஆம் தேதி வரை கண்டு ரசிக்கலாம்.