வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை கடைத்தொகுதிகளும் மின்னிலக்க முறைகளுக்கு மாறும் : அமைச்சர் ஈஸ்வரன்
விரைவில் சைனாடவுன், லிட்டில் இந்தியா ஆகிய பகுதிகளுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் உள்ள சில கடைத்தொகுதிகளும் மின்னிலக்க முறைகளுக்கு மாறவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக அளவில் இடம்பெற்றுவரும் மின்னிலக்க உருமாற்றத்தின் வழி சிங்கப்பூர் பயன்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதைச் சாத்தியமாக்க வணிகங்களுக்கும் குடிமக்களுக்கும் நன்மை தரும் உரிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
மின்னிலக்கமயம் தங்களுக்கு எவ்வாறு நன்மையளிக்கலாம் என்பதை நிறுவனங்கள் அறிந்துகொள்ள உதவுவது அத்தகைய முயற்சிகளில் முக்கிய அங்கம் பெறும்.
தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சேனல் நியூஸ்ஏஷியாவுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவ்வாறு கூறினார்.
மின்னிலக்கமயம் சிங்கப்பூருக்குத் தனித்துவமானது அல்ல.
ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
ஆனால் அந்த நாடுகளும் சிங்கப்பூர் எதிர்நோக்குவது போன்ற சவால்களையே எதிர்நோக்குகின்றன.
துறைகளும் வணிகத் தலைவர்களும் உகந்த முயற்சிகளைத் தீர்மானிப்பது அவசியம்.
அத்தகைய முயற்சிகள் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
கம்போங் கிளாம் மரபுடைமை வட்டாரம் மின்னிலக்க முறைகளுக்கு மாறியதைத் திரு. ஈஸ்வரன் சுட்டினார்.
ரொக்கமற்ற பரிவர்த்தனைகள், மிகை மெய்நிகர் திசைகாட்டும் முறை போன்றவை அங்கு பயன்படுத்தப்படுகின்றன.
சிங்கப்பூரின் முதல் மின்னிலக்கத் திறன் பெற்ற வட்டாரமாக அது கருதப்படுகிறது.
விரைவில் சைனாடவுன், லிட்டில் இந்தியா ஆகிய பகுதிகளுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் உள்ள சில கடைத்தொகுதிகளும் மின்னிலக்க முறைகளுக்கு மாறவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், மின்னிலக்க முறைகளை மேலும் அதிகமானோருக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்லமுடியும் என்று அவர் சொன்னார்.