அரசாங்கத் துறையின் தகவல் நிர்வாகம் தனியார் துறைக்கு ஈடான அல்லது அதைவிடக் கூடுதல் தரத்தில் இருக்க வேண்டும்: அமைச்சர் எஸ் ஈஸ்வரன்
சிங்கப்பூரில், தகவல் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத் துறை, தனியார் துறைக்கு ஈடான அல்லது அதைவிடக் கூடுதல் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இன்று (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிங்கப்பூரில், தகவல் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத் துறை, தனியார் துறைக்கு ஈடான அல்லது அதைவிடக் கூடுதல் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இன்று (பிப்ரவரி 12) நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஓர் அறிவார்ந்த தேசமாகச் செயல்படுவதற்கு அது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்த போது திரு. ஈஸ்வரன் அவ்வாறு கூறினார்.
2012இல் அறிமுகமான தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம் தனியார் துறையில் தகவல் பாதுகாப்புக்கான தரநிலையை வரையறை செய்கிறது.
2018இல் தகவல் பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் பொதுத்துறை நிர்வாகச் சட்டம் வழி அரசாங்கத் துறைக்கு அறிமுகமாகின.
அதோடு அரசாங்க அமைப்புகளால் சேகரிக்கப்படும் தகவல்கள் அதிகாரத்துவ இரகசியங்கள் சட்டம், வருமான வரிச் சட்டம், தொற்றுநோய்கள் சட்டம், புள்ளி விவரங்கள் சட்டம் போன்றவற்றால் பாதுகாக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
அதோடு அரசாங்கத் துறை தங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தவறான முறையில் கையாண்டதாக நம்புவோர் அது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பு, அமைச்சு அல்லது காவல்துறையிடம் புகார் பதிவு செய்யலாம் என்றும் திரு. ஈஸ்வரன் கூறினார்.