'900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உணவு நன்கொடை தேவை' - ஜாமியா உணவு வங்கி
ஜாமியா உணவு வங்கி, 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவ, பொதுமக்களிடம் உணவு நன்கொடை கோரியுள்ளது.
ஜாமியா உணவு வங்கி, 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவ, பொதுமக்களிடம் உணவு நன்கொடை கோரியுள்ளது.
மக்கள் வாகனங்களில் நேரடியாக வந்து உணவு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை அது நடத்தியது.
கிருமிப்பரவல் சூழலில், உதவி கோரும் வசதி குறைந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதைச் சமாளிக்க வங்கியில் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு இத்தகைய நன்கொடை நிகழ்ச்சிகள் உதவும் என்று நம்பப்படுகிறது.
வங்கியின் முதல் உணவு நன்கொடை திரட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மக்கள் அதிகத் தொடர்பின்றி நன்கொடை வழங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்ற டிசம்பர் மாதம், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், உணவு நன்கொடை கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு அதிகரித்ததாக வங்கி தெரிவித்தது.
படிப்படியாக அதிகரித்த எண்ணிக்கை, சென்ற மாதம் 920ஐ எட்டியது.
இரு மாதங்களுக்கு ஒரு முறை குடும்பங்களுக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது. தற்போது இன்னும் ஒரு முறை வழங்க மட்டுமே போதுமான இருப்பு உள்ளது.
குறைந்தது அடுத்த மூன்று முறை வழங்கத் தேவையான உணவைச் சேமித்து வைத்துக்கொள்ள வங்கி திட்டமிடுகிறது.
ஒற்றைப் பெற்றோர், மூத்தோர், உடற்குறையுள்ளோர், சமூக நல இல்லங்களில் வசிப்போரின் குடும்பத்தார் ஆகியோருக்கு உதவி சென்று சேர்கிறது.