ஜூரோங் வெஸ்டில் லாரிமீது மோதிய பேருந்து: ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்
பள்ளிக்கு அருகே ஓரமாக லாரி நின்றுக்கொண்டிருந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
ஜூரோங் வெஸ்ட் ஸ்தரீட் 41ல் உள்ள ஃபூஹூவா உயர்நிலைப்பள்ளிக்கு முன் நின்றுகொண்டிருந்த லாரிமீது பேருந்து ஒன்று மோதியதில் பேருந்து ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
விபத்து இரவு சுமார் 11.25 மணிக்கு நடந்தது.
பள்ளிக்கு அருகே ஓரமாக லாரி நின்றுக்கொண்டிருந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
லாரியை நோக்கி வந்தப் பேருந்து அதை மோதியதில் லாரி எதிர் திசைக்குத் தள்ளப்பட்டது.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க மலாய் ஓட்டுநர் மயக்க நிலையில் இருந்ததாகச் சம்பவ இடத்தில் இருந்த நிருபர் இலக்கியா கூறினார்.
ஓட்டுநருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஏற்கனவே இதயத்தில் ஸ்டின்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பேருந்திலும் லாரியிலும் பயணிகள் இல்லை என்றும் அங்கிருந்தோர் கூறினர்.
இரவு சுமார் 11.27 மணிக்குக் காவல்துறைக்கும் அவசர மருத்துவ உதவி வாகனத்துக்கும் விபத்து குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 நிமிடங்களில் குடிமைத் தற்காப்புப் படை சம்பவ இடத்துக்கு வந்தது.
நடுத்தர வயது இந்திய லாரி ஓட்டுநருக்கு எவ்வித காயமும் இல்லை என்று தெரிகிறது.