சாலையும் சரித்திரமும் - கடையநல்லூர் ஸ்ட்ரீட்
தஞ்சோங் பகாரில் அமைந்துள்ள கடையநல்லூர் ஸ்ட்ரீட்டின் வரலாற்றைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
தஞ்சோங் பகாரில் அமைந்துள்ள கடையநல்லூர் ஸ்ட்ரீட்டின் வரலாற்றைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?
தமிழ்நாட்டின் கடையநல்லூர் என்ற ஊரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமிழ் முஸ்லிம்களைக் குறிக்கும் சாலையாக கடையநல்லூர் ஸ்ட்ரீட் விளங்குகிறது. அவர்கள் தஞ்சோங் பகார் வட்டாரத்தில் குடியேறினர். பின் இந்தியாவின் கடையநல்லூரிலிருந்து தங்கள் குடும்பத்தினரையும் சிங்கப்பூருக்கு வரவழைத்துக்கொண்டனர்.
தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர்கள், தமிழ்ப் பள்ளி ஒன்றை நிறுவும் முயற்சியில் இறங்கினர். ஆரம்ப முயற்சிகள் தோல்வியுற்றன.
1936ஆம் ஆண்டு 26 மாணவர்களுடன் ஒரு வகுப்பு தொடங்கப்பட்டது. அங்கு தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. தஞ்சோங் பகாரில் அமைந்திருந்த டிராஸ் ஸ்ட்ரீடில் (Tras Street)அந்த வகுப்பு செயல்பட்டது.
1946ஆம் ஆண்டு 72 தஞ்சோங் பகார் ரோட்டில் இருந்த கடைவீட்டில் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ்ப் புலவரின் பெயரில் பள்ளி செயல்பட்டது.
1960ஆம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு உமறுப்புலவர் உயர்நிலை தமிழ்ப் பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது. 1982ஆம் ஆண்டு வரை பள்ளி செயல்பட்டது.