LISHAவுக்கும், சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கமும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டுள்ளன.
LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கமும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையும் வர்த்தகர்களுக்கு உதவும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டுள்ளன.
புத்தாக்கத் தீர்வுகள், மின்னிலக்கமயமாதல், மனிதவளத் தெரிவுமுறை ஆகியவற்றை லிட்டில் இந்தியா வட்டார வியாபாரிகள் பின்பற்றுவதற்கான திறன் மேம்பாட்டின் தொடர்பில் இருதரப்பும் இணைந்து பணியாற்ற அது உதவும்.
தொடர்பு தகவல் அமைச்சு, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்டவை அதற்கு ஆதரவளிக்கும்.
LISHA, அதன் 18ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் அந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
மரினா மாண்டரின் ஹோட்டலில் நேற்றிரவு 7 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில், தொடர்பு தகவல் அமைச்சரும், வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு. எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் ஈஸ்வரன், மின்னிலக்கத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை ஆராய, நம் கடைக்காரர்கள் LISHAவிடம் உதவி நாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
LISHA இந்தத் திட்டத்தில் நம்பகமான பங்காளியாய் விரிவான பங்கை ஆற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.