சிங்கப்பூரில் மஹோகனி விதைகளைச் சாப்பிட்ட 7 பேருக்குக் கல்லீரல் பாதிப்பு
விதைகளை அவர்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வாங்கியதாகக் கூறினர்.
சிங்கப்பூரில் கடந்த மூவாண்டுகளில், மஹோகனி விதைகளைச் சாப்பிட்ட 7 பேருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளில் அந்த விதைகள், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாக ஆணையம் குறிப்பிட்டது.
எனினும் அதன் ஆற்றலையோ பாதுகாப்பையோ உறுதிப்படுத்த மருத்துவரீதியான சோதனைகள் இல்லை என்பதை ஆணையம் சுட்டியது.
கல்லீரல் செயல்பாடுகளில் பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, கல்லீரலில் காயம் போன்றவை குறித்துப் புகார்கள் பதிவாயின.
பாதிக்கப்பட்டோர் 40 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டோர். அவர்களில் ஐவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
வேறு சில மருந்துகளையும் அவர்கள் எடுத்துவந்தனர்.
மஹோகனி விதைகளை உட்கொண்ட 30இலிருந்து 45 நாட்களுக்குள் அவர்களின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு மட்டும் ஆறு மாதத்துக்குப் பிறகு பிரச்சினை ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர்.
மருந்து வகையில் விற்கப்பட்ட விதைகள் “Natural Miracle Healer” என்று அழைக்கப்பட்டன.
விதைகளை அவர்கள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வாங்கியதாகக் கூறினர்.
அந்த விதைகளைச் சாப்பிட்டு உடல் நலம் குன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.