குடும்பங்களையும் உறவினர்களையும் காணப்போவதில் பெரும் மகிழ்ச்சி - மலேசியா செல்லும் பயணிகள்
குடும்பங்களையும் உறவினர்களையும் காணப்போவதில் பெரும் மகிழ்ச்சி - மலேசியா செல்லும் பயணிகள்
மலேசியாவில் உள்ள குடும்பங்களையும் உறவினர்களையும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காணப்போவதில் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக மலேசியா செல்லும் பயணிகள் சிலர் செய்தியிடம் தெரிவித்தனர்
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தரைவழி சிறப்புப் பயண ஏற்பாடு இன்று காலை தொடங்கியது.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் குடும்பங்களைக் கொண்டுள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
உட்லண்ட்ஸ் தற்காலிகப் பேருந்து முனையத்தில் இருந்து முதல் பேருந்து காலை 8 மணிக்கு மலேசியா புறப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தேன். பிறகு இன்று தான் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது
என்றார் 32 வயதான திரு. தனேஷ்.
நான் சிங்கப்பூரில் இருந்த போது என் குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட நண்பர்களையும் உறவினர்களையும் பார்த்துப் நன்றி சொல்லவுள்ளேன்.
4 நாளுக்குத் தான் பயணம் மேற்கொள்ள நேரம் கிடைத்தது. பிறந்த சில நாளிலேயே குழந்தையை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்துவிட்டேன்.
இப்போது குழந்தையைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார் திரு. தனேஷ்.
வீட்டிற்குச் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளேன், நான் வருவது வீட்டில் யாருக்கும் தெரியாது, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கக் காத்திருப்பதாகக் கூறுகிறார் திரு. கவின்ராஜ்.
என்னைக் கண்டால் எனது பாட்டி மிகவும் மகிழ்ச்சியடைவார். அதனால் தான் இந்த ரகசிய ஏற்பாடு.
எந்த பிரச்சினைகளும் வந்துவிடக்கூடாது என்பதால் இரண்டு நாளுக்கு முன்னே PCR சோதனைகள் செய்து கொண்டேன்.
மலேசியா சென்ற பிறகும் நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ளப்போவதாகக் கவின்ராஜ் கூறினார்.
நோய்ப்பரவல் காரணமாகக், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே எல்லை கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்தன.
தற்போது இரு நாடுகளிலும் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சிறப்புப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூருக்கும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் இடையிலான விமானச் சேவைகளும் இன்று தொடங்குகின்றன.
6 விமான நிறுவனங்கள் அந்தச் சேவைகளை வழங்குகின்றன.