போலி விசா கொண்டிருந்த ஆடவர்களுக்குச் சிறை தண்டனை
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மலேசிய விசாவைப் போல போலி ஆவணங்களைத் தங்களின் கடப்பிதழ்களில் வைத்திருந்த இலங்கை ஆடவர்கள் மூவருக்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்த விசா வழக்கத்துக்கு மாறாகத் தோற்றமளித்ததாக அதிகாரிகள் கூறினர்.
26 வயது நல்லையா செல்வமணி ரோஹன், 23 வயது கந்தநாதன் ஜசீதரன் ஆகிய இருவரும் இலங்கையில் முகவர் ஒருவரின் உதவியை நாடியதாகக் கூறினர்.
ரஜினிகாந்த் என அந்த முகவர் தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் வேலைத் தேடிக்கொடுப்பதாக உறுதியளித்த ரஜினிகாந்த், அந்த ஆடவர்களிடம் 2,600 வெள்ளியைப் பெற்று சிங்கப்பூர்வழியாக மலேசியாவுக்கு அழைத்துச்செல்வதாகச் சொன்னார்.
இந்த மாதம் 18ஆம் தேதி மூவரும் இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ரோஹன், ஜசீதரனின் கடப்பிதழ்களை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
அதில் போலி விசாவை வைத்து மீண்டும் திருப்பிக்கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அதே கதைதான் மூன்றாவதாகக் கைதுசெய்யப்பட்ட 20 வயது ரூபன் டியாஸ்ரெபின்சனுக்கும்.
விசாரணை தொடங்கும்முன்னரே ரஜினிகாந்த் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
போலிப் பயண ஆவணம் வைத்திருப்போருக்கு 10,000 வெள்ளிவரை அபராதமோ 10 ஆண்டுச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.