மருத்துவக் கட்டணங்களுக்காக உணவகத்திலிருந்து பணம் திருடிய ஆடவருக்குச் சிறை
காதலியின் மகளது மருத்துவக் கட்டணங்களுக்காக உணவகத்திலிருந்து பணம் திருடிய துணை மேலாளருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
காதலியின் மகளது மருத்துவக் கட்டணங்களுக்காக உணவகத்திலிருந்து பணம் திருடிய துணை மேலாளருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
35 வயது மாஜா இஸ்கண்டரியா முகமது ஜுஃப்ரி (Maja Iskandaria Mohamed Juffri), காலியர் கீ (Collyer Quay) பகுதியில் உள்ள Monti at 1-Pavilion உணவகத்தில் பணிபுரிந்தார்.
உணவகத்தின் அன்றாட வசூலைப் பாதுகாப்பாக வைத்திருந்து, மறுநாள் வங்கிக் கணக்கில் செலுத்துவது அவரது பணி.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதிக்கும், ஏப்ரல் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் 21,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைச் சொந்தச் செலவிற்காக எடுத்ததாகக் கூறப்பட்டது.
களவாடிய தொகையை பிலிப்பீன்ஸில் உள்ள தமது காதலிக்கு அனுப்பிவைத்ததாக நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
காதலியின் மூத்த மகள் ஏற்கனவே சிறுநீரகச் செயலிழப்பால் மாண்டதாகவும், மருத்துவமனைக் கட்டணங்களுக்குப் போதிய பணம் இல்லாததால் அவ்வாறு நேர்ந்ததாகவும் மாஜா குறிப்பிட்டார். இப்போது இளைய மகளும் அதே சிகிச்சைக்குச் செல்லவேண்டியிருப்பதால் பணத்தை எடுத்து அனுப்பியதாகவும், ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.
உணவக மேலாளரிடமும், நீதிமன்றத்திலும் தனது குற்றத்தை மாஜா ஒப்புக்கொண்டார்.
அரசாங்க வழக்குரைஞர்கள் கோரியபடி நம்பிக்கை மோசடி செய்த அவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்தகைய குற்றத்துக்கு 15 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.