மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்குச் சிறை
மெதுவோட்டம் செய்துகொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவர் ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவோட்டம் செய்துகொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவர் ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இந்த ஆண்டு மே மாத நடுப்பகுதியில் நடந்தது.
யீஷூன் அவன்யூ 1இல், தமது விநியோக வாகனத்தில் ஆபாசக் காணொளி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார் 60 வயது கண்ணன் சுகுமாரன்.
தனியாக மெதுவோட்டம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரைக் கண்டவுடன், கண்ணன் தமது வாகனத்திலிருந்து இறங்கி அவரிடம் சென்று தகாத முறையில் நடந்துகொண்டார்.
அந்தப் பெண் அவரது பிடியிலிருந்து தப்பிக்கப் போராடிய போது, கண்ணன் அவரைக் குத்தினார். அதனால் அந்தப் பெண் கீழே விழுந்ததில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.
அவர் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளைக் கூறவே, அது அவரிடம் பயத்தை உண்டாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சமயம் மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றொரு 39 வயதுப் பெண் அந்தப் பக்கமாக வந்திருக்கிறார். பெண்ணின் அலறலைக் கேட்ட அவர், அவர்களை நோக்கிச் சென்றார்.
அதை அறிந்த கண்ணன், உடனடியாக இடத்திலிருந்து தப்பித்து வாகனத்தை எடுத்துக்கொண்டு விரைந்தார்.
காப்பாற்ற வந்த பெண், கண்ணனின் வாகன எண்ணை குறித்துக்கொண்டு காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.
அன்றிரவே கண்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நாலரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வயதின் காரணமாக அவருக்குப் பிரம்படி விதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக அவருக்கு மேலும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.