Maple Bear குழந்தைப் பராமரிப்பு நிலையம் தொடர்பான இணையப் பதிவு குறித்துக் காவல்துறை விசாரணை
தியோங் பாருவிற்கு அருகில் உள்ள Maple Bear குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலிருந்து ஒரு பிள்ளையை அடையாளந்தெரியாத நபர் ஒருவர் அழைத்துச்செல்ல முயன்றதாகக் கூறும் இணையப் பதிவு பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
தியோங் பாருவிற்கு அருகில் உள்ள Maple Bear குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலிருந்து ஒரு பிள்ளையை அடையாளந்தெரியாத நபர் ஒருவர் அழைத்துச்செல்ல முயன்றதாகக் கூறும் இணையப் பதிவு பற்றிக் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஹெவலோக் ரோட்டில் உள்ள அந்த நிலையத்தில் நேற்று நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் பற்றிய இணையப் பதிவு தனது கவனத்துக்கு வந்திருப்பதையும் அது குறித்து விசாரணை நடத்தப்படுவதையும் காவல்துறை உறுதிப்படுத்தியது.
தியோங் பாரு வில்லேஜ் Facebook பக்கத்தில் நேற்றிரவு வெளியான பதிவு அந்தப் பிள்ளையின் தாயாருடைய நண்பர் என்று கூறிக்கொண்ட நபரால் எழுதப்பட்டிருந்தது.
பிள்ளையை அழைத்துச்செல்ல முயன்ற ஆடவர், குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் ஊழியர்களிடம் பிள்ளையின் பெயரைக் கூறியதாகவும் அதன் பிறகு அந்தச் சிறுமி வெளியே கொண்டுவரப்பட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.
சிறுமிக்கு ஆடவரை அடையாளந்தெரியாததால் அவள் அழத் தொடங்கியதாகவும் அதன் காரணமாக அவளை அழைத்துச் செல்ல இயலவில்லை என்றும் சொல்லப்பட்டது.
சிறுமியின் பெற்றோருக்கும் அந்த ஆடவரை அடையாளந்தெரியவில்லை என்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவில் கூறப்பட்டிருந்தது.
விசாரணை நடைபெறுவதால் அந்தப் பதிவு குறித்துக் கருத்துரைக்க இயலாது என்று Maple Bear தெரிவித்தது.
அத்தகைய சம்பவங்களைக் கடுமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட காவல்துறை, ஊகங்களில் ஈடுபடுவதையோ ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதையோ தவிர்க்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
அது பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தக்கூடும் என்று காவல்துறை வலியுறுத்தியது.