சர்ச்சைக்குரிய கடல்பகுதி குறித்து மலேசியாவுடன் சுமுகத் தீர்வு காண சிங்கப்பூர் விருப்பம் - அமைச்சர் காவ்
சிங்கப்பூருக்குச் சொந்தமான கடல்பகுதியில் இன்னும் இரண்டு மலேசியக் கப்பல்கள் இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்குச் சொந்தமான கடல்பகுதியில் இன்னும் இரண்டு மலேசியக் கப்பல்கள் இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் இரண்டு நாடுகளிடையே நடைபெறவுள்ள விவாதத்திற்கு அது உகந்தது அல்ல என்பதைத் திரு. காவ் வலியுறுத்தினார்.
கடந்த புதன்கிழமை, சிங்கப்பூரின் கடல்பகுதியில் ஒரு கப்பல் மட்டும் இருந்ததாகத் திரு. காவ் தெரிவித்திருந்தார்.
மலேசியா பதற்றத்தை மட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடல்பகுதியில் இருக்கும் கப்பல்களை எண்ணுவது முக்கியமல்ல. அனைத்துக் கப்பல்களையும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து மலேசியா மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்
என்றார் திரு. காவ்.
ஏனெனில் இருதரப்புப் பேச்சுக்கு அது உகந்தது அல்ல என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
முதலில் இது தேவையற்றது. மலேசியாவின் சட்டபூர்வ உரிமை கோரலில் இது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மேலும் இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று எதிர்நோக்கியுள்ள நிலையில் ஆபத்து அதிகம் என்பதால் அது தொடர்ந்து கவலைக்குரிய ஒன்று. யாரும் எதிர்பாராமல் விபத்துகள் ஏற்படச் சாத்தியமுண்டு. அப்படி ஏதேனும் நேர்ந்தால், அது அதிகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். துரதிருஷ்டவசமாக, மலேசியா பின்வாங்க மறுத்துவருகிறது
என்றார் திரு. காவ்.
கடல்துறைப் பூசல் குறித்து, அடுத்த மாத இரண்டாம் வாரத்தில் இருதரப்புப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
அதில், நல்லெண்ணத்தோடு பங்கேற்க சிங்கப்பூர் எண்ணியுள்ளதாகத் திரு. காவ் குறிப்பிட்டார்.