வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஒளிபரப்பு நிலையத்தை மீடியாகார்ப் வழிநடத்தும்
ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் என 4 மொழிகளிலும் தொலைகாட்சி, மின்னிலக்க ஊடகங்கள், வானொலி ஆகியவற்றில் விரிவான தகவல்களை மீடியாகார்ப்பின் செய்தியாளர்கள் தொடர்ந்து அளிப்பர்.
சிங்கப்பூரில் நாளைமறுநாள் நடக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்புக்கான ஒளிபரப்புச் சேவைகளை மீடியாகார்ப் நிறுவனம் வழங்கும்.
2500க்கும் மேற்பட்ட அனைத்துலக, உள்ளூர்ச் செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சி குறித்த தகவல்களை மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக அனைத்துலக ஊடக நிலையமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
அதற்குள் இயங்கவுள்ள ஒளிபரப்பு நிலையத்தை மீடியாகார்ப் நிறுவனம் வழிநடத்தும்.
சேனல் நியூஸ்ஏஷியா தலைமையில் 4 மொழிகளில் சிங்கப்பூருக்கும் வட்டாரத்துக்கும் அந்நிகழ்வு குறித்த விரிவான செய்திகள் வழங்கப்படும்.
நேரடி ஒளிபரப்பு, நிகழ்ச்சிகள் கண்காணிப்பு, வெளிப்புறச் செய்திகள் போன்ற சேவைகளை மீடியாகார்ப் வழங்கவுள்ளது.
பொறியாளர்கள், தயாரிப்புச் சேவைப் பணியாளர்கள், செய்தியாளர்கள் என மீடியாகார்ப்பின் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியை உலகிற்குப் படைப்பதன் ஓர் அங்கமாகப் பங்குவகிப்பதில் மீடியாகார்ப் பெருமை கொள்கிறது என்றார் மீடியாகார்ப் தலைமை நிர்வாக அதிகாரி தாம் லோக் கெங்.
உச்சநிலைச் சந்திப்பின் தொடர்பில் பணியாற்றும் செய்தியாளர்களுக்குச் சிறந்த வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கான அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் என 4 மொழிகளிலும் தொலைகாட்சி, மின்னிலக்க ஊடகங்கள், வானொலி ஆகியவற்றில் விரிவான தகவல்களை மீடியாகார்ப்பின் செய்தியாளர்கள் தொடர்ந்து அளிப்பர்.