மருத்துவத் தொழில்நுட்பத்தில் புதுமை புகுத்துவோருக்கு ஆதரவளிக்கும் திட்டம் - சுமார் 50 மில்லியன் வெள்ளி நிதியுதவி
சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தைக் கொண்டுவருவோருக்குக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தைக் கொண்டுவருவோருக்குக் கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்குச் சுமார் 50 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.
ஆசிய-பசிபிக் வட்டாரத்துக்கான அந்தத் திட்டம் தொடர்பில், தேசியப் பல்கலைக்கழகச் சுகாதாரக் கட்டமைப்பும், ஆசிய ஆய்வு புத்தாக்கக் கூட்டு நிறுவனமும் (Asia Research & Innovation Alliance Limited) இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளன.
திட்டத்தின் கீழ், சோதிக்கப்படும் புத்தாக்க யோசனைகளில் ஒன்று, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் உடலோடு சேர்த்து உணர்கருவியைத் தைக்கும் நடைமுறை.
உடலுக்குள் எங்காவது ரத்தக் கசிவு ஏற்பட்டால் அதை உடனடியாகக் கண்டறிய அது உதவும்.
மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனை வெற்றிபெற்றால், அந்த நடைமுறை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடப்புக்கு வரக்கூடும்.
அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு சிக்கல் ஏதும் ஏற்பட்டால், சிறிது நேரங்கழித்தே நோயாளிகளிடம் அதற்கான அறிகுறி வெளிப்படையாகத் தெரியவரும்.
அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.
அந்தச் சூழலில் விரைவாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரிடும்.
உணர்-கருவிகள் அப்போதைக்கு அப்போது சிக்கல்களை அடையாளம் காண்பதால், 20 விழுக்காடு வரை நேரத்தைச் சேமிக்கமுடியும்.
மகப்பேற்றில் சிக்கலை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளுக்கு உதவும் கருவி ஒன்றும் சோதிக்கப்படுகிறது.
கருவில் உள்ள சிசுவின் இதயத் துடிப்பை வீட்டிலிருந்தபடியே கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள அது உதவும்.
புத்தாக்கக் கருவிகள், அவசர சிகிச்சைப் பிரிவில் பயிற்சி பெறும் மருத்துவர்களுக்கும் தாதிகளுக்கும் மிகவும் உதவும்.