பேருந்து ஓட்டுநரை துன்புறுத்தலில் இருந்து காப்பாற்ற உதவிய இருவருக்கு அங்கீகாரம்
பேருந்து ஓட்டுநர் தாக்குதலுக்கு ஆளானபோது, அவரைக் காப்பாற்றிய இருவர் அங்கீகரிக்கப்பட்டனர்.
பேருந்து ஓட்டுநர் தாக்குதலுக்கு ஆளானபோது, அவரைக் காப்பாற்றிய இருவர் அங்கீகரிக்கப்பட்டனர்.
சம்பவம் இம்மாதம் 15-ஆம் தேதி, பாசிர் ரிஸ் டிரைவ் ஒன்றில் இருந்த ஒரு பேருந்து நிலையத்தில் நடந்தது.
அங்கு பேருந்து எண் 21, நிறுத்தப்பட்டபோது, அதில் முகக் கவசம் அணியாத பயணி ஒருவர் ஏறியதாக நம்பப்படுகிறது.
முகக்கவசம் அணியாதது குறித்து ஓட்டுநர் கேட்டபோது, அவர் ஓட்டுநரைப் பலமுறை குத்தியதோடு, கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இரு ஆடவர்கள், அதைக் கவனித்தனர்.
25 வயது, முகமது முத்தாசிம் காசிம் (Muhammad Mu’tasim Kassim), உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினார்.
அங்கிருந்த மற்றொரு ஆடவரான 29 வயது கிளமெண்ட் டானும் (Clement Tan) உதவிக்கு வந்தார்.
காசிம், டான், சம்பவ இடத்தில் இருந்த மற்றொருவர் மூவரும், ஓட்டுநரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் பயணியை வாகனத்திலிருந்து வெளியே இழுத்தனர்.
இரு ஆடவர்களும், காவல்துறை அதிகாரிகள் வரும் வரை, பயணியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.
அவ்வாறு செய்வதற்கு,தேசிய சேவை புரிந்த அனுபவம் உதவியதாக அவர்கள் கூறினர்.
இருவரின் செயல்களையும் அங்கீகரிக்கும் வகையில் நேற்று அவர்களுக்குச் சான்றிதழும், பரிசுப் பொட்டலமும் வழங்கப்பட்டன.
ஓட்டுநரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது, இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வேண்டுமென்றே ஒருவரைத் தாக்கியது, ஆபத்தான ஆயுதம் வைத்திருந்தது ஆகியவை அவை.
ஆடவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 12 சென்டிமீட்டர் நீளம் கொண்ட கத்தி ஒன்று இருந்தது.