Preetipls காணொளியை வெளியிட்டதற்காகக் கோரிய மன்னிப்பு போலியானது: உள்துறை அமைச்சு
NETS மின்னியல் கட்டணச் செயலியின் விளம்பரத்தை விமர்சனம் செய்யும் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட ப்ரீத்தி நாயரும் சுபாஸ் நாயரும் கோரியிருக்கும் மன்னிப்பு போலியானது, மனப்பூர்வமானதல்ல என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
NETS மின்னியல் கட்டணச் செயலியின் விளம்பரத்தை விமர்சனம் செய்யும் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்ட ப்ரீத்தி நாயரும் சுபாஸ் நாயரும் கோரியிருக்கும் மன்னிப்பு போலியானது, மனப்பூர்வமானதல்ல என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் மன்னிப்புக் கேட்பதுபோல் நடிப்பதாக உள்துறை அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
அவர்கள் வெளியிட்ட Youtube காணொளி அவமதிக்கும் விதத்தில் இருந்ததாகப் பல சிங்கப்பூரர்கள் கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் அமைச்சின் அறிக்கை கூறியது.
காணொளியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததன்மூலம் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக YouTube பிரபலம் ப்ரீத்தி நாயரும் அவரது சகோதரர் சுபாஸும் முன்னதாகக் கூறியிருந்தனர்.
Instagram பதிவு ஒன்றில் அந்த மன்னிப்புக் கோரப்பட்டிருந்தது.
தாங்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை என்றும் அது யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மின்னியல் கட்டண முறை அனைவருக்கும் உகந்தது என்பதை உணர்த்துவதே விளம்பரத்தின் நோக்கம் என்று கடந்த திங்கட்கிழமை Havas Worldwide நிறுவனமும் மீடியாகார்ப்பின் The Celebrity அமைப்பும் குறிப்பிட்டன.
விவகாரத்தின் தொடர்பில் Havas Worldwide நிறுவனம் நேற்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
விளம்பரத்துக்கு முழுப் பொறுப்பேற்பதாகவும் அதன்தொடர்பில் வெளிப்படையாக மன்னிப்புக் கோருவதாகவும் மீடியாகார்ப் கடந்த செவ்வாய்க்கிழமை கூறிற்று.
இனி அத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்கக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அது குறிப்பிட்டது.