ஒற்றைத் தலைவலி - யார் அவதியுறுகின்றனர்?
அதிகமாகக் கொட்டாவி விடுதல், கழுத்து, தோள்களில் வலி ஆகியவற்றுடன் தொடங்கும் ஒற்றைத் தலைவலி, திருவாட்டி ஆர்லின் அகமதுக்கு நான்கு நாட்களுக்கு நீடிக்கும்.
அதிகமாகக் கொட்டாவி விடுதல், கழுத்து, தோள்களில் வலி ஆகியவற்றுடன் தொடங்கும் ஒற்றைத் தலைவலி, திருவாட்டி ஆர்லின் அகமதுக்கு நான்கு நாட்களுக்கு நீடிக்கும்.
41 வயது தாய் அவர். இந்தத் தலைவலி இன்று நேற்றல்ல.. கடந்த 20 ஆண்டுகளாக இதனால் அவதிப்படுகிறார்.
கடுமையான தலைவலியால் சரிவர வேலைசெய்ய முடியாது. வெளியே சென்று நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதும் சிரமம்.
இருவாரங்களுக்கு ஒருமுறை திருவாட்டி ஆர்லினுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுவது வழக்கம். அத்துடன் வாந்தியும் மயக்கமும் சேர்ந்துகொள்ளும்.
சிங்கப்பூரர்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பட்டியலில் ஒற்றைத் தலைவலி நான்காம் இடத்தில் உள்ளது.
இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஆண்டுக்குப் புதிதாக 1,250 நோயாளிகள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.
ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவோரில் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்அதிகம்.
அதில் முதல்முறையாக ஒற்றைத் தலைவலி ஏற்படும் 90 விழுக்காட்டினர் 40 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள்.
வழக்கமான தலைவலிக்கு மாறாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவோருக்கு தலையின் ஒரு பக்கத்தில் கடுமையான வலி ஏற்படலாம்.
வழக்கமான தலைவலியை விட அதிக நேரத்திற்கு அது நீடிக்கும். அந்த நேரத்தில் சுற்றியுள்ள ஒலி, ஒளி, நறுமணம் ஆகியவை உடல்ரீதியாக அதிகம் பாதிக்கிறது. அத்துடன் வாந்தி, குமட்டல், கண்பார்வையில் பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம்.
மூளையின் ரசாயன அளவு ஏற்றத்தாழ்வாக இருக்கும்போதும் Serotonin சுரப்பியின் அளவு உடலில் குறைவாக இருக்கும்போதும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒற்றைத் தலைவலி, மரபணுசார்ந்த உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், அது சுற்றுப்புறத்தாலும் வாழ்க்கைமுறையினாலும் ஏற்படும் சாத்தியமும் உள்ளது.
ஒற்றைத் தலைவலியைக் குணப்படுத்த இப்போதைக்கு சிங்கப்பூரில் புதிய சிகிச்சை முறைகள் இல்லை.
அடிக்கடி தலைவலியால் பாதிக்கப்படுவோர் எதனால் தலைவலி ஏற்படுகிறது என்பதைக் கண்காணித்து அவற்றைத் தவிர்க்கவேண்டும்.
அறிகுறிகள் ஏற்படும்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.
வழக்கமாக உடற்பயிற்சி செய்தல், நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல், போதுமான உறக்கம், புகைபிடிப்பதை நிறுத்துதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதும் முக்கியம்.
ஒரு நல்ல செய்தி... வயது ஏறஏற ஒற்றைத் தலைவலி குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.