சாலைச் சந்திப்பில் லாரியிலிருந்து விழுந்த சரக்கைத் தூக்குவதற்கு உதவிய கட்டுமான ஊழியருக்குப் பாராட்டு
போக்குவரத்து அதிகம் உள்ள சாலைச் சந்திப்பில், லாரியிலிருந்து விழுந்த சரக்கைத் தூக்குவதற்கு உதவி செய்த கட்டுமான ஊழியருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
போக்குவரத்து அதிகம் உள்ள சாலைச் சந்திப்பில், லாரியிலிருந்து விழுந்த சரக்கைத் தூக்குவதற்கு உதவி செய்த கட்டுமான ஊழியருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.
அது குறித்து Facebook-இன் The Royal Singapore பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று, 400-க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.
காணொளியில் ஆடவர் ஒருவர் சாலைச் சந்திப்பின் நடுவில் விழுந்து கிடந்த சரக்கை எடுப்பதற்குச் சிரமப்படுகிறார்.
வாகனப் போக்குவரத்து சற்றும் குறையாத நிலையில், அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பது தெரிகிறது.
அப்போது அவரை நோக்கி ஓடிவந்த கட்டுமான ஊழியர் ஒருவர், உதவிக்கரம் நீட்டுகிறார்.
இருவரும் அந்தச் சரக்கைத் தூக்கி நிமிர்த்தும் வேளையில், மேலும் ஓர் ஆடவர் தள்ளுவண்டியுடன் வருகிறார்.
அவர்கள் பின்னர் சரக்கைத் தள்ளுவண்டியில் வைத்தவாறு அதைச் சாலையிலிருந்து நகர்த்துகின்றனர்.
சாலையில் ஒரு காரிலிருந்தவாறு காணொளியை எடுத்த திரு. லின், கட்டுமான ஊழியரைப் பாராட்டினார்.
"அடையாளம் தெரியாதவருக்கு உதவியதற்கு மிக்க நன்றி. உங்களுடைய இரக்கமான செயல்கள்தான் சிங்கப்பூரைச் சிறப்படையச் செய்கின்றன" என்று அவர் கூறினார்.
அவரைப் போன்று இணையவாசிகள் பலரும் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்தனர்.