சமூக அளவில் நோய்த்தொற்று அதிகமானதால் பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்
சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்று அதிகமானதால் சில பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்த்தொற்று அதிகமானதால் சில பள்ளி மாணவர்களும் ஊழியர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.
அண்மையில் ராஃபிள்ஸ் (Raffles) பெண்கள் தொடக்கப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி தொடக்கநிலை முதலாம் வகுப்பில் பயில்கிறார்.
இன்று அப்பள்ளி வீட்டில் இருந்து கற்கும் நடைமுறையைச் செயல்படுத்தியது.
தொடக்கநிலை இரண்டு முதல் ஆறு வரை உள்ள மாணவர்கள் நாளை பள்ளிக்கு வரலாம் என்று பெற்றோருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை கூறியது.
முதலாம் வகுப்பு மாணவர்கள் எப்போது பள்ளிக்குத் திரும்புவர் என்பது பற்றித் தகவல் இல்லை.
மற்ற சில தொடக்கப் பள்ளிகளிலும் குறைந்தது ஓர் உயர்நிலைப் பள்ளியிலும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானதாகப் பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
அது பற்றி CNA, கல்வியமைச்சிடம் விவரம் கேட்டது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மிதமான அறிகுறிகளே இருப்பதாகவும் அவர்கள் இப்போது நன்கு உடல் நலம் தேறி வருவதாகவும் அமைச்சு கூறியது.
பள்ளி மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் மற்ற மாணவர்களைப் பாதுகாக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது.
நிலைமையை அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும், பள்ளிகளின் பாதுகாப்பு விதிமுறைகளை சூழ்நிலைக்கு ஏற்பத் தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சு கூறியது.