மாணவர்கள், பள்ளிகளின் இந்த ஆண்டு தேசிய தின அனுசரிப்பு
மாணவர்கள், பள்ளிகளின் இந்த ஆண்டு தேசிய தின அனுசரிப்பு
COVID-19 கிருமிப்பரவல் சூழலால், பள்ளிகள் தேசிய தின அனுசரிப்பைச் சற்று வித்தியாசமாக நடத்திவருகின்றன.
இந்த ஆண்டு தேசிய தினக் கருப்பொருளான 'Together, A Stronger Singapore' என்பதை ஒட்டி, கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள், பல படைப்புகளில் ஈடுபட்டனர்.
உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான மாணவர்கள், இணையம் மூலம் ஒன்றுகூடி 'Be The Light' என்ற பாடலைப் பாடினர்.
லியன்ஹுவா (Lianhua) தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் இசையமைத்த அந்தப் பாடல், சமூகத்துக்குப் புத்துணர்வூட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
அந்தப் பாடலின் காணொளி, சமூக ஊடகங்களில் இன்று வெளியிடப்பட்டது.
SYF Stronger Together என்னும் கலைப்படைப்பு ஒன்று SYF இணையத் தளத்திலும், கம்போங் அட்மிரல்ட்டி சமூகக்கூடம், தெம்பனிஸ் ஹப் ஆகிய இடங்களிலும் அடுத்த மாத இறுதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
கிருமிப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டத்தின்போது பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் கலைப் படைப்புகள், காணொளிகள், படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து அந்த மின்னிலக்கக் கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது.
தேசிய தின வாரத்தின்போது, எப்படி ஒரு வலுவான சிங்கப்பூரை உருவாக்கலாம் என்பது குறித்து மாணவர்கள் உரையாடுவார்கள்.
அதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட புத்தகம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பள்ளிகளின் தேசிய தின அனுசரிப்பு நிகழ்ச்சி, கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளது என்பதில் முக்கிய கவனம் செலுத்தும்.
தேசிய தினத்தன்று, 9 சீருடைக் குழுக்களைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் காலையில் நடத்தப்படும் அணிவகுப்பில் கலந்துகொள்வர்.