மூன் ஜே இன், அதிபர் ஹலிமா யாக்கோப் சந்திப்பு
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அதிபர் ஹலிமா யாக்கோபை இன்று இஸ்தானாவில் சந்தித்தார்.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அதிபர் ஹலிமா யாக்கோபை இன்று இஸ்தானாவில் சந்தித்தார்.
திரு. மூன் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருக்கும் அதிகாரத்துவப் பயணத்தின் முதற்கட்டமாக அந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
திரு. மூனுக்கு மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் லீ சியென் லூங்கையும் திரு. மூன் சந்தித்தார்.
மதிய விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் வந்துசேர்ந்த திரு. மூன் நாளை வரை இங்கிருப்பார் என வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
திருவாட்டி ஹலிமாவின்அழைப்பையேற்று தென்கொரிய அதிபர் சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.
திரு. மூனின் வருகையையொட்டி சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் வர்த்தகம், சுற்றுச்சூழல், சிறிய, நடுத்தர, புதிய நிறுவனங்கள் ஆகியவற்றின் தொடர்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
திரு. மூனைக் கௌரவிக்கும் வகையில் திருவாட்டி ஹலிமா அரசாங்க விருந்தளித்துச் சிறப்பிப்பார்.
நாளை திரு. மூன் ROK and ASEAN எனும் தலைப்பில் 42ஆவது 'சிங்கப்பூர் உரையை'(Singapore Lecture) ஆற்றுவார்.
கிழக்காசியாவில் அமைதியையும் வளத்தையும் எட்டுவதில் பங்காளித்துவத்தை வலியுறுத்தும் வகையில் உரை அமையும்.
துணைப் பிரதமரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியென் முன்னிலையில் உரை இடம்பெறும்.
கொரியத் தீபகற்பத்தில் நிரந்தர அமைதியை எட்டுவதன் தொடர்பில் திரு. மூன் தமது கொள்கைகள், இலக்குகள் குறித்து உரையாற்றுவார் என இம்மாதத் தொடக்கத்தில் தென்கொரியாவின் Blue House அரசாங்க அலுவலகம் கூறியிருந்தது.
வட்டாரத்தின் ஆசிய நாடுகளுடனான ஒத்துழைப்பிலும் திரு. மூனின் உரை கவனம் செலுத்தும்.
சென்ற மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சிங்கப்பூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து திரு. மூனின் சிங்கப்பூர் வருகை இடம்பெற்றுள்ளது.