அன்னை...
இந்தச் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியுள்ளன..
பல்வேறு பொறுப்புகளைச் சுமக்கும் தங்கள் அன்புத் தாயாரைப்பற்றிப் பிள்ளைகளும் தாய்மை உணர்வுபற்றி அன்னையரும் செய்தி நேயர்கள் சிலர் எங்களோடு பகிர்ந்துகொண்டனர்.
முத்து விளைந்ததால் சிப்பிக்குப் பெருமை, உன்னை ஈன்றதால் எனக்குப் பெருமை!
- பிரேமா மகாலிங்கம் ( தாயார்)
(பிரேமா மகாலிங்கம், அபிராமி குணசேகரன்)
என் அம்மாதான் என்னுடைய உத்வேகம், எனக்காக எப்போதும் துணையிருப்பார், நானும் எப்போதும் அவருக்குத் துணையாக இருப்பேன்.
- அபிராமி குணசேகரன்(மகள்)
எனது அம்மாவிற்கு 6 பிள்ளைகள். நான் 5ஆவது பிள்ளையாகப் பிறந்தேன். 6 பேரை நன்கு சீராட்டி வளர்த்தார். அவரின் வழிகாட்டுதலில் நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளோம். அவர் கற்றுக்கொடுத்த பண்புகளை அம்மா என்ற பொறுப்புடன் பிள்ளைகளிடமும் விதைத்து வருகிறேன்.
- கவித்தா மெலின்ட (அம்மா)
(கவித்தா மெலின்ட, டெரன்)
பிள்ளைகளுக்கு நற்பண்புகளை விதைத்து என்னைச் செதுக்கியுள்ளார். பல்லாண்டு காலம் எனது அம்மா உடல் நலத்தோடு வாழ வேண்டுகிறேன்.
- டெரன் (மகன்)
குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் மட்டும்தான் கணவருக்குப் பிள்ளைகள். ஆனால் என் குடும்பத்தில் என் கணவரையும் சேர்த்து எனக்கு ஐந்து பிள்ளைகள். என்னைப் போலக் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும் அனைத்து உள்ளங்களும் அன்னை உள்ளமே.
- சரோஜினி டேவிட் (அம்மா)
(சரோஜினி டேவிட், ஷீலா டேவிட்)
தமிழின் முதல் எழுத்துக்கு இரண்டே அர்த்தம்தான். ஒன்று அறம்... மற்றொன்று அம்மா... அறத்தைக் கற்பித்த அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்!
- ஷீலா டேவிட் ( மகள்)
எனது மிகப் பெரிய ஆசீர்வாதமாகவும், என் வெற்றியின் ஆதாரமாகவும் இருப்பதற்கு நன்றி. என்னால் கூறமுடியாத அளவுக்கு நான் உங்களை நேசிக்கின்றேன்.
- நெஷ்விந்தரன் (மகன்)
(நெஷ்விந்தரன், ஷேரன் பீட்டர்ஸ்)
என்னுடைய முக்கிய அடையாளமே தாய்மைதான். இதன் ஒவ்வொரு நொடியையும் நான் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். நான் உயிருக்கும் மேலாக நேசிக்கும் என் மகனால் முழுமை அடைகிறேன்.
- ஷேரன் பீட்டர்ஸ் (அன்னை)
நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் உள்ளதால், தாயாரை நேரடியாகச் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கலாம்.
- கௌரி
'செய்தி'இடம் பேசிய நேயர்கள் அனைவருமே ஒருமித்த குரலில் சொன்ன கருத்து இதுதான்.
"எங்கள் அன்னைதான் உலகின் மிகச்சிறந்த அன்னை !"