மியன்மார் தமிழ்ப் பள்ளியில் தொண்டூழியம் செய்யும் NTU முன்னாள் மாணவர்கள்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர் குழுவினர், தற்போது மியன்மார் பள்ளிகளில் உதவி வருகின்றனர்.
(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் முன்னாள் மாணவர் குழுவினர், தற்போது மியன்மார் பள்ளிகளில் உதவி வருகின்றனர்.
'ஃ' எனப்படும் சமூக நலத் திட்டத்தின்கீழ் 9 தொண்டூழியர்கள் மியன்மார் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தச் சென்றுள்ளனர். மியன்மாரின் தமிழ்ச் சமூகத்தினருக்கு உதவுவது அவர்களுடைய நோக்கம்.
பயணத்தின் முதல்கட்டமாக டாலா (Dalla) பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிக்கு அவர்கள் சென்றனர்.
மாணவர்களுக்கான சுமார் 120 கிலோகிராம் பொருள்களைக் கப்பல் வழியாக ஏற்றி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து பள்ளிக்கு எடுத்துச்சென்றனர்.
மாணவர்களுக்காகக் கணினி வசதிகளை ஏற்படுத்தித் தந்தனர் தொண்டூழியர்கள். சுமார் மூன்று கணினிகளும் திரைகளும் (projector screen) வகுப்பறைகளில் பொருத்தப்பட்டன.
பள்ளியில் பயின்றுவரும் 9 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்குச் சுகாதார வகுப்பு, முதலுதவி வகுப்பு, புவியியல் வகுப்பு ஆகியன நடத்தப்பட்டன. சாதனை புரிந்த தமிழர்களைப் பற்றியும் தொண்டூழியர்களிடம் கற்றுக்கொண்டனர் மாணவர்கள்.
வகுப்புகள் மட்டுமின்றி மாணவர்களுடன் விளையாடவும் செய்தனர் தொண்டூழியர்கள். மாணவர்களுக்கான சிறப்பு அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
நாளை பீலிக்கா (Peelica) பகுதியிலிருக்கும் தமிழ்ப் பள்ளிக்குச் செல்லவிருக்கின்றனர் தொண்டூழியர்கள்.