தேசிய நெருக்கடிக் காலத்தில் மன அமைதிக்காக, நாளும் ஒரு கவிதை
சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பிலுள்ள இவ்வேளையில், ஒருசிலர் மன இறுக்கத்தை எதிர்நோக்கக்கூடும்.
சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பிலுள்ள இவ்வேளையில், ஒருசிலர் மன இறுக்கத்தை எதிர்நோக்கக்கூடும்.
எப்போதும் வீட்டில் அடைந்துகிடப்பதால் ஒருவித எரிச்சல் சிலருக்கு உருவாகக்கூடும்.
அவர்களுக்கு இதமளிக்கும் ஆற்றல், இனிய தமிழ்க் கவிதைகளுக்கு உண்டு.
அப்படிப்பட்ட கவிதைகளை, நேரடியாக இல்லங்களுக்குக் கொண்டுசேர்க்க முயல்கிறது 'நாளும் ஒரு கவிதை' முயற்சி.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
தினமும் ஒரு கவிஞரின் கவிதை, காணொளியாக அதன் Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
மொத்தம் 61 கவிதைகள் இடம்பெறுவதாகக் கூறுகிறார், திட்டத்தை வழிநடத்தும் ராமகிருஷ்ணன் கார்த்திகேயன்.
கவிதையை ஒருவர், அதற்கு ஏற்ற ஓசை நயத்துடன் வசிக்கிறார். கவிதையின் வரிகளும் துணைவாசகமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
அத்திட்டம் பற்றிய மேல் விவரங்களை 'செய்தி'உடன் பகிர்ந்துகொண்டார் தமிழ்ப் பண்பாட்டு மைய உறுப்பினர் அருள் ஓஸ்வின்.
வீட்டிலேயே அடைந்து இருப்போருக்கு உற்சாகம் அளிப்பதும் தமிழ்க் கவிதைகளின்மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதும் திட்டத்தின் நோக்கம். பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டும் கவிதைகளையும் உள்ளூர்க் கவிதைகளையும் இணையவாசிகள் எதிர்பார்க்கலாம். காணொளி வடிவில் வலம் வரும் கவிதைகளை எளிதாகப் பகிர்ந்துகொள்ளலாம். கவிதை வரிகளும் பதிவில் இடம்பெற்றுள்ளதால் அதனை இணையவாசிகள் எளிதாகப் பின்தொடர முடியும்.
என்றார் ஓஸ்வின்.
அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை, கவிதைகள் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் Facebook பக்கத்தில் இடம்பெறும்.