சுவா சு காங் இடுகாட்டு வளாகத்தில் 2020ஆம் ஆண்டு 'அஸ்தி தூவும்' சேவை வழங்குவதற்கான வசதி அறிமுகம்
சிங்கப்பூரில் எரியூட்டப்படும் மனித உடல்களின் அஸ்தியை என்ன செய்யலாம் என்று யோசிப்போருக்கான கூடுதல் தெரிவாக இந்தச் சேவை வழங்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
சுவா சு காங் இடுகாட்டு வளாகத்திலும் மண்டாய் தகனச்சாலை மற்றும் சாம்பல் காப்பகத்திலும் 'அஸ்தி தூவும்' சேவை வழங்குவதற்கான வசதி அறிமுகமாகவுள்ளது.
சிங்கப்பூரில் எரியூட்டப்படும் மனித உடல்களின் அஸ்தியை என்ன செய்யலாம் என்று யோசிப்போருக்கான கூடுதல் தெரிவாக இந்தச் சேவை வழங்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.
பல்வேறு தரப்பினருடன் அமைப்பு கலந்துரையாடலை நடத்தியதன் விளைவாகப் புதிய சேவை அறிமுகம் காணவுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டிலிருந்து டிசம்பர் மாதம்வரை கலந்துரையாடல்கள் நடந்தன.
பல்வேறு சமயக் குழுக்கள், ஈமச் சடங்குக்கான சேவைகளை வழங்குவோர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
வடிவமைப்பு, செயல்முறை, பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகள், கலாசார,சமயத் தேவைகள் போன்றவை குறித்துப் பேசப்பட்டது.
சுவா சு காங் இடுகாட்டு வளாகத்தில் 2020ஆம் ஆண்டும், மண்டாய் தகனச்சாலை மற்றும் சாம்பல் காப்பகத்தில் 2021ஆம் ஆண்டும் சேவை அறிமுகமாகும்.
தைவான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா போன்றவற்றில் அத்தகைய பழக்கங்கள் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டுவருகின்றன.
அத்தகைய முறையைச் சிங்கப்பூரிலும் செயல்படுத்தலாம் எனப் பொதுமக்களில் சிலர் கருத்துரைத்ததைத் தொடர்ந்து புதிய சேவை தொடங்கவுள்ளது.
அனைத்து சமயத்தினரும் பயன்படுத்தும் வகையில் வளாகம் அமைந்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்ததாக அமைப்பு குறிப்பிட்டது.