பேராசிரியருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ள NUS
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவருக்கு COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பல்கலை அதன் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது.
கிருமி தொற்றியதாக இன்று அறிவிக்கப்பட்ட எட்டுப் பேரில் அவரும் ஒருவர்.
54 வயதுப் பேராசிரியர் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலையின் தலைவர் டான் எங் சாய் மாணவர்களுக்கு எழுத்திய கடிதத்தில், பல்கலை முழுமையாகக் கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதாய்த் தெரிவித்தார்.
பேராசிரியர் சென்ற சுற்றுப்புற, வடிவமைப்புப் பிரிவு முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.
முக்கியமாக, கைப்பிடிகள், மின் தூக்கிகள், மின் தூக்கிக்குக் காத்திருக்கும் இடங்கள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டதாய்க் கூறப்பட்டது.
பேராசிரியரைச் சந்தித்த ஊழியரைக் கட்டாய விடுப்பில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் பிப்ரவரி 10ஆம் தேதி நோய் அறிகுறிகள் தென்பட்ட பிறகு மாணவர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் கடைசியாக மாணவர்களை பிப்ரவரி 5ஆம் தேதி சந்தித்தார்.