சிங்கப்பூரில் இந்திய வெங்காயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுமா?
இந்தியா, உள்நாட்டில் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த, நேற்று வெங்காய ஏற்றுமதிக்கு உடனடித் தடை விதிப்பதாக அறிவித்தது.
இந்தியா, உள்நாட்டில் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த, நேற்று வெங்காய ஏற்றுமதிக்கு உடனடித் தடை விதிப்பதாக அறிவித்தது.
அதை அடுத்து, சிங்கப்பூரில் இந்திய வெங்காயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
'செய்தி' தொடர்புகொண்ட சில காய்கறி வர்த்தகர்கள், தற்போதைக்குப் போதுமான வெங்காயம் இருப்பில் உள்ளதாகத் தெரிவித்தனர்.
இருப்பினும், குறைந்தது அடுத்த 2 வாரங்களுக்கு வெங்காய விலை அதிகரிப்பை மக்கள் எதிர்பார்க்கலாம் என்று கோமலாஸ் வெஜி மார்ட் (Komalas Vege Mart) கூறியது.
அப்படி, இந்திய வெங்காயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படலாம் என்றும் அது குறிப்பிட்டது.
ஆனால், மற்ற நாடுகளிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டாலும், சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இந்திய வெங்காயத்தையே விரும்புவதாக
'செல்வி ஸ்டோர்ஸ்' (Selvi Stores) சுட்டியது.
இந்தியாவிலிருந்து வெங்காயங்கள் பழையபடி வரும் வரை, விலைகள் அதிகமாகவே இருக்கும் என்றும் அது சொன்னது.
வியாபாரம் பாதிக்குமா?
பெரும்பாலான இந்திய உணவு வகைகளுக்கு வெங்காயம் ஒரு அத்தியாவசியமான பொருள்.
அதனால், விலை எவ்வளவு அதிகரித்தாலும், இந்தியர்கள் தொடர்ந்து வாங்கத் தான் செய்வார்கள் என்றது கோமலாஸ் வெஜி மார்ட்.
வெங்காயம் பெரும்பாலான இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுவதால், பற்றாக்குறை நீடித்தால், சமைத்த உணவுகளின் விலையும் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் வியாபாரிகள்
வெங்காயம், பணப் பையையும் அழ வைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது!
ஒருவேளை இந்திய வெங்காயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை வேறு எந்தெந்த நாடுகளிலிருந்து வரவழைக்கப்படும், அதற்கான திட்டம் என்ன, என்பன குறித்து 'செய்தி' சிங்கப்பூர் உணவு அமைப்பைத் தொடர்பு கொண்டுள்ளது.