நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கும் திரு. சிங்கிற்குக் கூடுதல் சலுகைள், இரட்டிப்புப் படித்தொகை
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கிற்கு அரசாங்கம் வழங்கும் சலுகை விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கிற்கு அரசாங்கம் வழங்கும் சலுகை விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற நாயகர் அலுவலகமும், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகமும் இணைந்து அந்தத் தகவல்களை வெளியிட்டன.
எதிர்க்கட்சித் தலைவராகத் திரு. சிங்கின் நியமனம் பற்றிப் பிரதமர் லீ சியென் லூங் இம்மாதம் 11ஆம் தேதி அறிவித்திருந்தார்.
திரு சிங்கிற்கு உதவியாக உதவியாளர்களையும் வளங்களையும் அரசாங்கம் வழங்கும்.
சிங்கப்பூரில் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற அமைப்பு பின்பற்றப்படுவதால், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைப் போன்றே எதிர்க்கட்சித் தலைவருக்கான கடமைகளும், சலுகைகளும் பரிசீலிக்கப்ப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னர் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்று யாரும் இடம்பெற்றதில்லை.
இருப்பினும் நேற்று அமைச்சரவைப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசியலில் கூடுதலான மாற்றுக் கருத்துகள் இடம்பெறவேண்டும் என்று சிங்கப்பூரர்கள் விரும்புவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதால், அத்தகைய விருப்பம் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
திரு. பிரித்தம் சிங்கிற்குக் வழங்கப்படும் சலுகைள்
- நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள், மசோதாக்கள் ஆகியவை தொடர்பில் அவர் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கலாம்.
- நாட்டின் அதிகாரத்துவ நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதோடு, நாடாளுமன்றத்தில் அவருக்குத் தனி அலுவலகமும் வழங்கப்படும்.
- திரு. சிங், வருடாந்தரப் படித்தொகையாக 385,000 வெள்ளி பெறுவார்.
- தமது எதிர்கட்சித் தலைவர் பொறுப்புக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புக்கும் சேர்த்து, அந்தத் தொகையை அவர் பெறுவார்.
- நாடாளுமன்றக் கூட்டங்களில் அவர் பேசுவதற்குக் கூடுதல் நேர அவகாசம் வழங்கப்படும்.
- நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு ஆகியவற்றுடன், ஒருவேளை நெருக்கடிநிலை ஏற்பட்டால் அது பற்றியும், அரசாங்கத்தின் அதிகாரத்துவ, ரகசியமான தகவல்கள் அவருடன் பகிர்ந்துகொள்ளப்படும்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டதில்லை
- 1950களிலும், 1960களின் தொடக்கத்திலும், சிங்கப்பூர் சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதும் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக யாரும் அங்கீகரிக்கப்படவில்லை.
- 1955-ஆம் ஆண்டுக்கும் 1959-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், திரு. லீ குவான் இயூ ஆகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் செயல் கட்சியை வழிநடத்தினார்.
- 1961-ஆம் ஆண்டுக்கும் 1963-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், Barisan Sosialis கட்சியை டாக்டர் லீ சியூ சோ (Lee Siew Choh) வழிநடத்தினார்.
இரு தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எனும் அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.