ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 5 மாதச் சிறை
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு 5 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24-வயது நேட்டலி சியாவ் யூ ஸென் (Natalie Siow Yu Zhen), மற்ற 6 பேருடன் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால் அவரின் குற்றச்சாட்டுகள் பின்னர் குறைக்கப்பட்டன.
வேண்டுமென்றே தீங்கு விளைவித்தது, ஆயுதம் ஏந்தியவருடன் தொடர்பில் இருந்தது போன்ற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் சியாவ்.
தகாத முறையில் அவர் நடந்துகொண்டதும் தீர்ப்பு வழங்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மதுபானக் கூடத்தில் வேலைசெய்த அந்தப் பெண், சம்பவம் நடந்த நாளன்று நண்பர்களுடனும், மற்ற சந்தேக நபர்களுடனும் ஒன்றாக மற்ற மதுபானக் கூடங்களுக்குச் சென்றிருந்தார்.
அங்கு அவர்கள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது, சந்தேக நபரான டான் சென் யாங் (Tan Sen Yang ) தன்னிடம் இருந்த கத்தியை வெளியில் எடுத்ததாகக் கூறப்பட்டது. அப்போது அவரின் நண்பர்கள் ஆயுதத்தை மறைக்கும்படி் கூறினர்.
குற்றச்சாட்டப்பட்ட 7 பேரில் டான் மட்டுமே தற்போது கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
மதுபானக் கூடத்திலிருந்து வெளியேறும் போது, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், டான் கத்தியை மீண்டும் வெளியில் எடுத்து அங்குள்ள பாதுகாவலர், வழிப்போக்கர் இருவரையும் கத்தியால் தாக்கியதாகக் கூறப்பட்டது.
அப்போது மின்படியில் இறங்கிய 31- வயது சதீஷ் நோயல் கோபிதாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டான் அவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. காயமடைந்து தரையில் விழுந்த சதீஷை மற்றவர்கள் தாக்கியதாய் கூறப்பட்டது.
சியாவ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.