COVID-19 ரகசியத் தகவல்கள் வெளியிடப்பட்டதன் தொடர்பில் பெண்ணும் அவரது கணவரும் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்
COVID-19 ரகசியத் தகவல்கள் வெளியிடப்பட்டதன் தொடர்பில் பெண்ணும் அவரது கணவரும் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்
COVID-19 தொடர்பான ரகசியத் தகவல்களை வெளியிட்டதாக முன்னாள் அரசாங்க ஊழியர்மீதும் அவரது கணவர்மீதும் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.
கடந்த ஆண்டு COVID-19 சூழல் காரணமாகப் பள்ளிகள் மூடப்படும் என்பதை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே அந்தத் தகவல் பொதுமக்களிடம் பரவத் தொடங்கியது.
2020ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி அந்தச் சம்பவம் நடந்தது.
அதைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் காவல்துறையிடம் புகார் கொடுத்தன.
ஊடகத்துக்கான நகல் அறிக்கையில் வீட்டில் கற்கும் திட்டங்களும் பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் மூடப்படும் விவரங்களும் இடம்பெற்றிருந்தன.
அந்த அறிக்கையைப் பெறக்கூடிய பொறுப்பில் அப்போது இருந்த 38 வயது அரசாங்க ஊழியர், அறிக்கையைப் படம்பிடித்து WhatsApp மூலம் தமது 39 வயதுக் கணவருக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்தது.
அதன் பிறகு அந்த ஆடவர் அவரது நண்பர்களுக்கு அனுப்பி, பின்னர் அந்தப் படம் எல்லா சமூக வலைத்தளங்களிலும் பரவியது.
அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவிருக்கும் பெண்ணும் அவரது கணவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 2,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.