ஹாங்காங்கில் கிருமிப்பரவல் அதிகரித்தால், பயணமுறை ரத்துசெய்யப்படும் சாத்தியம் அதிகம்: போக்குவரத்து அமைச்சர் ஓங்
ஹாங்காங்கில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால், இரு நகரங்களுக்கும் இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை ரத்துசெய்யப்படும் சாத்தியம் அதிகம்.
ஹாங்காங்கில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால், இரு நகரங்களுக்கும் இடையிலான கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை ரத்துசெய்யப்படும் சாத்தியம் அதிகம்.
போக்குவத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) அவ்வாறு கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் கிருமிப்பரவல் அபாயம் இன்னும் குறைவாகவே இருப்பதால், இரு நகரங்களுக்கும் இடையில் விமானச் சேவைக்கான ஏற்பாடு தொடர்கிறது என்றார் அவர்.
ஹாங்காங்கின் தற்போதைய கிருமித்தொற்று நிலவரத்தால்,பயணமுறையின் தொடக்கம் சற்று பாதிக்கப்படலாம். இருப்பினும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பயண முறையைத் தொடர முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு வந்தாலும் ஹாங்காங்கிற்கு சென்றாலும், அது மகிழ்ச்சிமிக்க பயணமாக இருக்கவேண்டும் என்று திரு. ஓங் கூறினார்
"இருப்பினும், ஹாங்காங்கில் தொடர்புபடுத்தப்படாத புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தால், பயணமுறை ரத்துசெய்யப்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது." என்று திரு. ஓங் தெரிவித்தார்.
இருதரப்பு ஏற்பாட்டின் கீழ், சிங்கப்பூரிலோ, ஹாங்காங்கிலோ,7-நாள்களில் சராசரியாக 5க்கும் அதிகமான தொடர்புபடுத்தப்படாத புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானால் பயணமுறை ரத்துசெய்யப்படும்.
தற்போது அந்த எண்ணிக்கை 2.14ஆக உள்ளதாய் சிங்கப்பூர் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
இருதரப்புக் கட்டுப்படுத்தப்பட்ட பயணமுறை, திட்டமிட்டபடி நாளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைத்துப் பயணிகளுக்கும், கூடுதலாக, COVID-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.