ஜூன் முதல் தேதி அதிரடித் திட்டம் முடிவுக்கு வரும்போது...
கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முடிவடைந்தவுடன் வழக்கநிலை மூன்று கட்டங்களாகத் திரும்பவிருக்கிறது.
கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான அதிரடித் திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முடிவடைந்தவுடன் வழக்கநிலை மூன்று கட்டங்களாகத் திரும்பவிருக்கிறது.
சமூக அளவிலான நடவடிக்கைகளுக்கும் வர்த்தகங்களுக்கும் அது பொருந்தும்.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அதுகுறித்து அறிவித்தது. சமூக அளவிலான நோய்ப்பரவல் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன.
ஆனாலும் ஜூன் முதல் தேதிக்குப் பிறகு அனைத்து நடவடிக்கைகளும் வழக்கம்போல் செயல்படமுடியாது என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.
முதற்கட்டமாக ஒரு சில வர்த்தகங்கள் மட்டும் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
வெளிநோயாளிச் சேவை, நாட்பட்ட நோய்களுக்கான சேவை, பாரம்பரிய சீன மருத்துவம், பல் மருத்துவம் ஆகியவை அவற்றுள் சில.
அத்துடன், பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தாத்தா, பாட்டியை நேரில் சென்றுபார்க்க அனுமதிக்கப்படுவர்.
இருப்பினும், COVID-19 நோய்ப் பரவலால் மூத்தோரே மிக எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் நாள் ஒன்றுக்கு இருவர் மட்டுமே அவர்களை நேரில்போய்ச் சந்திக்க முடியும்.
மேலும், மூத்தோர் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது.
மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கலாம்.
குழுவாகச் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது, கராவோக்கே பாடல் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருக்கும்.
கிருமித்தொற்று மீண்டும் தலைதூக்கக்கூடிய அபாயத்தைக் கருத்திற்கொண்டு பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தொடர்ந்து முகக்கவசம் அணியவேண்டியிருக்கும்.