தீவு விரைவுச்சாலையில் ஒரே இடத்தில் பல விபத்துகள்
தீவு விரைவுச்சாலையின் ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த விபத்துகளில் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.
தீவு விரைவுச்சாலையின் ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த விபத்துகளில் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) காலை 11.15 மணிக்கு இரு கார்களும் கனரக வாகனம் ஒன்றும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்துத் தகவல் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
தீவு விரைவுச்சாலையில் சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் வழியில் புக்கிட் தீமா விரைவுச்சாலையின் நுழைவாயிலுக்கு முன் விபத்து நேர்ந்தது.
காவல்துறையினர் அந்த இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே, அங்கு இரு மோட்டார்சைக்கிள்கள் வழுக்கி விபத்துக்குள்ளாகியிருந்தன.
போக்குவரத்துக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவ இடத்தை அடைந்த பின்னர் மற்றுமொரு கார் அங்கு வழுக்கி விபத்துக்குள்ளானது.
அந்தக் கார் 30 வயதுப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி ஒருவரையும் 26 வயது குடிமைத் தற்காப்புப் படை உதவியாளர் ஒருவரையும் மோதியது.
இதற்கு முன் அங்கு விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளோட்டிகள் மீதும் கார் மோதியது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.
யோசிக்காமல் செயல்பட்டு மற்றவர்களைக் காயப்படுத்தியதற்காக வழுக்கிய காரின் 44 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
விபத்துகளுக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.