தீவு விரைவுச்சாலையில் 2 லாரிகளுடன் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் (PIE) நேர்ந்த விபத்தில் 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் (PIE) நேர்ந்த விபத்தில் 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார்.
ஜூரோங் டவுன் ஹாஸ் (Jurong Town Hall) வெளிவாயிலுக்கு அருகில் நேர்ந்த விபத்துக் குறித்து நேற்றிரவு சுமார் 8 மணிக்குத் தகவல் பெற்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
விபத்தில் 2 லாரிகளும், ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மோட்டார் சைக்கிளோட்டி, ஒரு லாரிக்கு அடியில் சிக்கியிருந்ததைக் கண்டனர்.
அவர் மாண்டதாக மருத்துவ உதவியாளர் உறுதிசெய்தார்.
41 வயது லாரி ஓட்டுநர், கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்த சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட விபத்து தொடர்பான காணொளியில் வாகனங்களின் சிதைவுகள் சாலையில் காணப்படுகின்றன.
மோட்டார் சைக்கிள் ஒன்று அதன் பக்கவாட்டில் கிடப்பதும் இரண்டு லாரிகள் சேதமடைந்ததும் தெரிகிறது.
விபத்துக் காரணமாக விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.