Notre Dame தேவாலயத் தீ: பிரதமர் லீ ஆழ்ந்த வருத்தம்
பிரதமர் லீ சியென் லூங், Notre Dame தேவாலயத்தைத் தீ சூழ்ந்துள்ள காட்சியினால் ஆழ்ந்த வருத்தமடைந்ததாகக் கூறியிருக்கிறார்.
பிரதமர் லீ சியென் லூங், Notre Dame தேவாலயத்தைத் தீ சூழ்ந்துள்ள காட்சியினால் ஆழ்ந்த வருத்தமடைந்ததாகக் கூறியிருக்கிறார்.
கிறிஸ்துவர்கள் புனித வாரத்தை அனுசரிக்கும் வேளையில் தீச் சம்பவம் நடந்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு. லீ குறிப்பிட்டுள்ளார்.
ஃப்ரான்ஸின் தேசிய நினைவுச் சின்னமான Notre Dame, அரிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய தேவாலயம்.
தீயால் அது சேதமடைந்தது குறித்து, பிரெஞ்சு மக்களுடன் இழப்பின் சோகத்தைத் தாம் பகிர்ந்துகொள்வதாகப் பிரதமர் கூறினார்.
அந்தத் தேவாலயம் "மானுட மரபுடைமையின் ஓர் அங்கம்" என்று அவர் புகழ்ந்தார்.
அதைக் கட்டியோர், வழிபட்டோர், தலைமுறை- தலைமுறையாக அதனை உள்ளத்தில் குடியிருத்தியோர் ஆகியோரது சமய நம்பிக்கையின் வெளிப்பாடாக அந்தத் தேவாலயம் திகழ்வதாகத் திரு. லீ குறிப்பிட்டார்.
மீண்டும் அது புனரமைக்கப்பட்டு பாரிஸின் புகழுக்குச் சிறப்பு சேர்க்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வேளையில், உலகத் தலைவர்கள் பலரும் பாரிஸ் தேவாலயத் தீச் சம்பவம் குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்துள்ளனர்.