மக்கள் செயல் கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் மீது நம்பிக்கை உள்ளது: பிரதமர் லீ
பிரதமரும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு. லீ சியென் லூங் தமது கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.
பிரதமரும் ஆளும் மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு. லீ சியென் லூங் தமது கட்சியின் உத்தேச வேட்பாளர்கள் மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.
மக்கள் செயல் கட்சியின் உத்தேச வேட்பாளர் ஐவன் லிம்மின் விலகலைத் தொடர்ந்து திரு. லீ அவ்வாறு கருத்துரைத்தார்.
மக்கள் செயல் கட்சி இதுவரை 28 புதுமுகங்களை உத்தேச வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தியுள்ளது.
அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடவிருக்கும் உத்தேச வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்காக நடத்தப்பட்ட காணொளி நேரலையில் பிரதமர் லீ அந்த விவரங்களை வெளியிட்டார்.
தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே உத்தேச வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
திரு. ஐவன் லிம் தொடர்பிலான இணைய விமர்சனங்களுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பிரதமர் லீ பதிலளித்தார்.
செயல்முறையாக இருந்தாலும் சரி, வேட்பாளராக இருந்தாலும் சரி, எதுவுமே 100க்கு 100 சரியானதாக அமையக்கூடியது அல்ல என்று அவர் விளக்கினார்.
மக்கள் செயல் கட்சியின் மற்ற உத்தேச வேட்பாளர்கள் தொடர்பில் எழுந்திருக்கும் விமர்சனங்களைச் சுட்டிய பிரதமர், சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றார்.
பிரச்சினைகள் எழுந்தால் அவற்றைக் கவனிக்கவேண்டும்; எதுவும் இல்லை என இருந்துவிடக்கூடாது என்று பிரதமர் கூறினார்.