எது சிங்கப்பூருக்குச் சரி எனப்படுகிறதோ அதைச் செய்வதற்கு மக்கள் செயல்கட்சி ஒருபோதும் தயங்கக்கூடாது: பிரதமர் லீ
பிரதமர் லீ சியென் லூங், ஒரு செயல் பிரபலமில்லாததாக இருந்தாலும் மக்களுக்குச் சரியானது என்றால் அதைச் செய்ய ஒருபோதும் தயங்கக்கூடாது என்று மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
பிரதமர் லீ சியென் லூங், ஒரு செயல் பிரபலமில்லாததாக இருந்தாலும் மக்களுக்குச் சரியானது என்றால் அதைச் செய்ய ஒருபோதும் தயங்கக்கூடாது என்று மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
மக்கள் செயல் கட்சியின் வருடாந்தரக் கருத்தரங்கில், கட்சியின் தலைமைச் செயலாளரான அவர் உரையாற்றினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் அதற்குத் தயாராக இருக்கும்படியும் திரு. லீ கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
மக்கள் செயல் கட்சி கடந்த பல ஆண்டுகளில் சிங்கப்பூரர்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்ட திரு. லீ, உயர்தர நம்பிக்கை, நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவையே அதற்குக் காரணம் என்றார்.
பொருள், சேவை வரி உயர்வு ஏன் தவிர்க்க முடியாதது என்பதை அவர் விளக்கினார்.
கட்சி வாக்காளர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதை அவர் சுட்டினார்.
சிங்கப்பூரில் இனம், சமயம் தொடர்பான பிரிவினை இன்னமும் இருப்பதாகத் திரு. லீ கூறினார்.
பல்லின, பல சமயச் சமுதாயத்தை ஆதரிக்கும் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.
அவ்வப்போது சிறுபான்மைச் சமூகத்தினரும் சிங்கப்பூரின் அதிபராவதை உறுதிசெய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறையும் அத்தகைய நடவடிக்கையில் ஒன்று என்றார் பிரதமர்.
மக்கள் செயல் கட்சி, ஊழியர்களுடன் அணுக்கமான உறவைக் கொண்டிருப்பதற்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸுடனான சுமுகமான உறவு முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஊழியர்களின் நலனுக்காகக் கட்சி எப்போதும் பாடுபடும் என்றார் அவர்.
நிச்சயமற்றதன்மை அதிகரித்திருக்கும் வேளையில், அடுத்த பொதுத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவது, 4ஆம் தலைமுறைத் தலைவர் குழு எதிர்நோக்கும் சிரமமான பணி என்றார் திரு. லீ.