வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று சட்ட, ஒழுங்கு நிலவரத்தைக் காவல்துறை அணுக்கமாகக் கவனிக்கும்
சிங்கப்பூரின் வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று சட்ட, ஒழுங்கு நிலவரத்தை அணுக்கமாகக் கவனிக்கவிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் வேட்புமனுத் தாக்கல் தினத்தன்று சட்ட, ஒழுங்கு நிலவரத்தை அணுக்கமாகக் கவனிக்கவிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒழுங்கற்ற முறையில் அல்லது சட்டவிரோதமான முறையில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் காவல்துறை தயங்காது என்று Facebook பதிவு ஒன்றில் அது கூறியது.
நாளை முற்பகல் 11 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் தொடங்கும்.
9 நிலையங்களில் உத்தேச வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வார்கள். உறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்களின் விவரங்கள் நண்பகல் வாக்கில் வெளியிடப்படும்.
உத்தேச வேட்பாளர்கள், முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்கள், இணக்கம் தெரிவிப்பவர்கள் சற்று முன்னதாகவே வருவது நல்லது என்றும் வேட்புமனுத் தாக்கல் நிலையங்களில் கார் நிறுத்த வசதிகள் இல்லை என்றும் காவல்துறை கூறியது.
வேட்புமனுத் தாக்கல் செய்பவர்களும் ஊடகத்துறையினரும் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
SafeEntry பதிவு, உடல் வெப்பநிலைப் பரிசோதனை, முகக்கவசம் அணிதல் போன்ற நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
சுகாதார அமைச்சு வழங்கிய ஆலோசனையின்படி பெரிய குழுக்களாகக் கூடுவதற்கு அனுமதியில்லை.
ஆதரவாளர்களும் பொதுமக்களும் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்விடத்தில் சுற்றித் திரியவும் அனுமதியில்லை.
காவல்துறையின் உரிமம் இல்லாமல் ஊர்வலத்தில் ஈடுபடுவதும் சட்டவிரோதமானது.
வேட்புமனுத் தாக்கல் நிலையங்களின் அருகில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடக்கூடாது என்றும் காவல்துறை அறிவுறுத்தியது.