காவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்
மெக்ஸ்வெல் ரோட்டில் சாலையைக் கடக்கும்போது, கார் ஒன்றால் மோதப்பட்ட சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி மாண்டதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
மெக்ஸ்வெல் ரோட்டில் சாலையைக் கடக்கும்போது, கார் ஒன்றால் மோதப்பட்ட சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி மாண்டதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்தக் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதை அவர் இன்று (பிப்ரவரி 15) உறுதிப்படுத்தினார்.
41 வயது திருமதி சலினா முகமது, நேற்று (பிப்ரவரி 14) காலை மாண்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மெக்ஸ்வெல் ரோட்டில் அமைந்திருக்கும் தமது அலுவலகத்திற்கு முன் சாலையைக் கடக்க முயன்றபோது அவர் விபத்தில் சிக்கினார்.
ஆபத்தான வகையில் காரை ஓட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்தக் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகத் திரு. சண்முகம் குறிப்பிட்டார்.
திருமதி சலினா, கடந்த 21 ஆண்டுகளாக சிங்கப்பூர்க் காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு, சட்ட அமலாக்கம், கண்காணிப்புக் கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்-ஆகியவற்றின் மூலம், வாகன ஓட்டுநர்களின் நடத்தை மேம்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
ஆனால், அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரும், ஆபத்தான வகையில் வாகனத்தைச் செலுத்தும் போக்கு அதிகரித்துவருவதை அவர் சுட்டினார்.
சாலை விபத்துகளால், மரணம் நேரும் ஆபத்தைக் குறைக்க நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் திரு. சண்முகம் வலியுறுத்தினார்.