‘பெண்ணாக இருந்த நான் அம்மாவாக’...முதல் அன்னையர் தினம் விவரிக்க முடியாத ஆனந்தத்தில்!
தாய்மை..
தாய்மை..
அது ஒரு புனிதமான உணர்வு..
கருவில் குழந்தையைச் சுமக்கத் தொடங்கியதுமுதல் பிள்ளை வளர்ந்து பெரியவரான பின்னரும்கூடத் தடையின்றித் தொடர்கிறது தாய்மையுணர்வு.
நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், மூன்று நாள்களுக்கு முன்னர் (மே 7ஆம் தேதி) ஓர் ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் திருமதி. கார்த்திகேயன்.
அவரைச் சந்தித்துவந்தது 'செய்தி'.
தாய்மை அடையும்போது ஏற்படும் உணர்வு?
பெண்ணிலிருந்து அம்மாவாக மாறும்போது அது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் உடலில் இருந்து ஒரு புது உயிரை உருவாக்கித் தந்துள்ளீர்கள். இதன்பிறகு, பல பொறுப்புகளை ஏற்க வேண்டும். சவால்களைச் சந்திக்க வேண்டும். என்ன நடந்தாலும்சரி, எப்போதும் அந்தச் சவால்களை எதிர்கொள்ள ஒரு தாய் தயாராக இருக்கவேண்டும்.
நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தின்போது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டன ?
எங்கும் வெளியே செல்ல முடியாது. வீட்டில் இருந்தபடியே நேரத்தைக் கழிப்பேன். தொலைக்காட்சி பார்ப்பது, சமைப்பது, இணையத்தில் பொருள்களை வாங்குவது ஆகியவற்றில் நேரம்போனது. நேரில் பார்த்து வாங்கும் அளவுக்கு, இணையத்தில் பொருள்களை வாங்குவதில் எனக்கு நிறைவு இல்லை.
உங்கள் கணவர் எவ்வாறு ஆதரவாக இருந்தார்?
கர்ப்பகாலத்தில் அவர் எனக்குப் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்தார். எனக்கு எந்தெந்தப் பொருள்கள் தேவைப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். வெளியே செல்லக் கட்டுப்பாடுகள் இருந்ததால் எனக்கு இனம் புரியாத பதற்றமும் மனவுளைச்சலும் ஏற்பட்டது. அதைச் சமாளிக்க, உணர்வுபூர்வமான ஆதரவை எனது கணவர் வழங்கினார்.
சக அன்னையருக்கு நீங்கள் கூறும் செய்தி?
பல்வேறு கட்டுப்பாடுகள் நடப்பிலுள்ள சிரமமான நேரம் இது. ஆனால், எப்படியாயினும் ஒரு தாயாக நாம் நமது பிள்ளையையும் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்போம். அன்னையர் எப்போதுமே ஆகச் சிறந்ததைத்தான் தருவார்கள். நல்ல காலம் வெகுதொலைவில் இல்லை.