மாணவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதையடுத்து, Raffles கல்வி நிலையத்தில் நாளை வகுப்புகள் ரத்து
சிங்கப்பூரில் இன்று மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிங்கப்பூரில் இன்று மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதில் 12 வயது Raffles கல்வி நிலைய மாணவரும் ஒருவர்.
அவர் கல்வி நிலையத்தில் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
அவர் இந்த மாதம் 21ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவில்லை என்றும் அமைச்சு சொன்னது.
அவர் இந்த மாதம் 20ஆம் தேதி, பீஷானில் உள்ள கல்வி அமைச்சின் மொழிக் கற்றல் நிலையத்தில் வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறார்.
Raffles கல்வி நிலையமும், பீஷானில் உள்ள கல்வி அமைச்சின் மொழிக் கற்றல் நிலையமும் நாளை முழுமையாகச் சுத்தம் செய்யும் பணியிலும், கிருமி நாசினி கொண்டு துடைக்கும் பணியிலும் ஈடுபடும். அதனால் நாளை வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வகுப்புகள் திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் தொடரும்.
Raffles கல்விநிலையத்தில் முதலாம் ஆண்டிலிருந்து 6ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கான இணைப்பாட நடவடிக்கைகள் அனைத்தும் இரு வாரங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Raffles கல்வி நிலையத்திலும், மொழிக் கற்றல் நிலையத்திலும் நோய் கண்ட மாணவருடன் அண்மையில் தொடர்பில் இருந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் 14 நாள்கள் கட்டாய விடுப்பில் இருப்பர் என்று கல்வி அமைச்சு சொன்னது.