அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை
சிங்கப்பூர்க் காவல்துறை, ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர்க் காவல்துறை, ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
மோசடிக்காரர்கள், அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து, குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை ஏமாற்றி வருவதாகத் துறை தகவல் அளித்தது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அதற்காகப் பணத்தை மாற்றிவிடச் சொல்லிப் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அத்தகைய மோசடிகளால், இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரை, சுமார் 40 பேர், மொத்தம் 3.9 மில்லியன் டாலரை இழந்ததாகக் காவல்துறை கூறியது.
உயர் நீதிமன்றம், Interpol என்னும் அனைத்துலகக் காவல்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் மோசடிக்காரர்கள் பேசி நடித்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
பின், பாதிக்கப்பட்டவர்கள், "Eric Wong Teng Hui" என்னும் அதிகாரியைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அவரைத் தொடர்புகொள்ள LINE என்னும் குறுந்தகவல் அனுப்பும் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அதன் பின்பு, பாதிக்கப்பட்டவர்களிடம், அந்த மோசடிக்காரர், அவரது போலியான அடையாள அட்டையைக் காட்டுவார். அதனுடன் சேர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கொண்ட பணிக்குழுவின் கடிதம் ஒன்றும் காட்டப்படும்.
அதை உண்மை என நம்பி, சிலர் ஏமாந்துபோகின்றனர்.
மோசடிகளில் ஏமாறாமல் இருக்கப் பொதுமக்களுக்குக் காவல்துறை அளிக்கும் ஆலோசனை:
- மோசடிக்காரர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பையும் அவர்களது கட்டளைகளையும் பொருட்படுத்தவேண்டாம்
- எந்த உள்நாட்டு அமைப்பும் தொலைபேசி மூலமாகவோ பதிவு செய்யப்படாத வழியிலோ பணம் செலுத்தும்படி கேட்காது
- உங்களைப் பற்றிய தகவல்களைத் தொலைபேசி மூலமோ, இணையத்தின் மூலமோ யாரிடமும் அளிக்கவேண்டாம்.