குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் மரணம்: விசாரணையில் உதவும் மேலும் 4 அதிகாரிகள்...
விசாரணைக் குழுவில் உள்துறை அமைச்சு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேராதோரும் இடம்பெற்றிருப்பார்கள்.
குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவையாளர் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவை வர்த்தக, தொழில் அமைச்சைச் சேர்ந்த மூத்த இயக்குநர் ஒருவர் வழிநடத்தவுள்ளார்.
உள்துறை அமைச்சு அதனை இன்று தெரிவித்தது.
விசாரணைக் குழுவில் உள்துறை அமைச்சு, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேராதோரும் இடம்பெற்றிருப்பார்கள்.
சம்பவத்தின் தொடர்பில் கைதான இரண்டு அதிகாரிகளும், காவல்துறை விசாரணை முடியும்வரை தற்காலிகமாகப் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரிக்கப்பட்டுவரும் மேலும் 4 அதிகாரிகள் அடுத்த மாதம் பதவி உயர்வு பெறுவதாக இருந்தது. தற்போது அதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
படையில் தளபத்தியப் பொறுப்பின் அவசியத்தை ஆணையர் எரிக் யாப் இன்று வலியுறுத்தினார்.
அன்றாடம் உயிரைப் பணையம் வைத்து வேலைபார்க்கும் ஆடவர்களையும் பெண்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு தளபதிகளுக்கு உண்டு என்றார் அவர்.
பிறரின் செயலால் அவர்களுக்குப் பங்கம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் அவர்களின் கடமை என்று திரு எரிக் கூறினார்.
சம்பவத்தில் மரணடடைந்த கொக் யுவன் சின் இன்று ஈராண்டு தேசியச் சேவையை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பதை அவர் சுட்டினார்.
யுவன் சின் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் நீரேற்றக் கிணற்றில் மூழ்கி மாண்டார்.
விசாரணை தொடர்கிறது. விதிமீறல்கள் காரணமாகவே அவர் மூழ்கினார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெளிவாய்த் தெரிவதாகக் கூறப்பட்டது.