சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மின்னியல் முறையில் வருகை அட்டை
சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், இன்று முதல் "SG Arrival Card” என்ற மின்னியல் சேவையின் முன்னோட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், இன்று முதல் "SG Arrival Card” என்ற மின்னியல் சேவையின் முன்னோட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
ஆணையத்தின் இணையத் தளத்திலும், திறன்பேசிச் செயலியிலும் முன்னோட்டச் சேவை இடம்பெறும். AirAsia, Jetstar Asia, Cathay Pacific, Singapore Airlines ஆகிய விமானச் சேவைகளின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே, அவர்களுக்கான வருகை அட்டையைச் சமர்ப்பிக்கலாம்.
அதன் மூலம், வெளிநாட்டுப் பயணிகள் சிங்கப்பூருக்குள் வரும்போது குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் அவர்களின் கடப்பிதழை மட்டும் சமர்ப்பித்தால் போதுமானது.
முன்னரே அவர்கள் மின்னியல் வருகை அட்டையைச் சமர்ப்பித்திருப்பதால் சோதனைகள் விரைவாக முடியும். அதேபோல குறிப்பிட்ட பேருந்துச் சேவை, படகுச் சேவைகளின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவருக்கும் அந்த முன்னோட்டம் பொருந்தும்.
அதன் பயன்பாடு பற்றி தீர்க்கமாக ஆய்வு செய்த பிறகு, திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்குள் தாள் வடிவிலான வருகை அட்டையின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மின்னியல் அட்டை பயன்பாட்டுக்குவரும்.